கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 3:1-23

3  ஆனாலும் சகோதரர்களே, உங்களை ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதர்களாக+ நினைத்து என்னால் பேச முடியாமல் போனது. ஆன்மீகச் சிந்தை இல்லாத மனிதர்களாக, கிறிஸ்தவ விசுவாசத்தில் குழந்தைகளாக,+ நினைத்தே உங்களிடம் பேசினேன்.  நான் உங்களுக்குத் திட உணவை ஊட்டவில்லை, பாலைத்தான் ஊட்டினேன். ஏனென்றால், நீங்கள் திட உணவைச் சாப்பிட முடியாமல் இருந்தீர்கள். சொல்லப்போனால், இப்போதும் சாப்பிட முடியாமல்தான் இருக்கிறீர்கள்.+  இன்னும் நீங்கள் ஆன்மீகச் சிந்தை இல்லாதவர்களாகத்தான் இருக்கிறீர்கள்.+ உங்கள் மத்தியில் பொறாமையும் சண்டை சச்சரவும் இருப்பதால் நீங்கள் ஆன்மீகச் சிந்தை இல்லாதவர்கள்தானே?+ உலக மக்களைப் போலத்தானே நடந்துகொள்கிறீர்கள்?  உங்களில் ஒருவன், “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும் வேறொருவன், “நான் அப்பொல்லோவைச்+ சேர்ந்தவன்” என்றும் சொல்வதால் நீங்கள் உலக மக்களைப் போலத்தானே இருக்கிறீர்கள்?  அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் இயேசுவின் சீஷர்களாவதற்கு உதவி செய்த ஊழியர்கள்தானே!+ நம் எஜமான் அவரவருக்குக் கொடுத்த ஊழியத்தைச் செய்கிறவர்கள்தானே!  நான் நட்டேன்,+ அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினார்.+ ஆனால், கடவுள்தான் வளர வைத்தார்.  அதனால், நடுகிறவனுக்கும் பெருமை சேருவதில்லை, தண்ணீர் ஊற்றுகிறவனுக்கும் பெருமை சேருவதில்லை; வளர வைக்கிற கடவுளுக்குத்தான் பெருமை சேரும்.+  நடுகிறவனும் தண்ணீர் ஊற்றுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்;* ஒவ்வொருவனும் தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவான்.+  நாங்கள் கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம். நீங்கள் கடவுளால் பண்படுத்தப்படுகிற நிலமாகவும், கடவுளால் கட்டப்படுகிற கட்டிடமாகவும் இருக்கிறீர்கள்.+ 10  கடவுள் எனக்குக் காட்டிய அளவற்ற கருணையால், திறமையான கட்டிடக் கலைஞனைப் போல் அஸ்திவாரம் போட்டேன்.+ ஆனால், அதன்மேல் வேறொருவன் கட்டிக்கொண்டிருக்கிறான். இருந்தாலும், ஒவ்வொருவனும் தான் கட்டும் விதத்தைக் குறித்துக் கவனமாயிருக்க வேண்டும். 11  ஏனென்றால், போடப்பட்டிருக்கிற அஸ்திவாரத்துக்குப் பதிலாக வேறெந்த அஸ்திவாரத்தையும் யாராலும் போட முடியாது; அந்த அஸ்திவாரம் இயேசு கிறிஸ்துதான்.+ 12  அந்த அஸ்திவாரத்தின் மீது தங்கம், வெள்ளி, விலைமதிப்புள்ள கற்கள், மரம், புல், வைக்கோல் ஆகியவற்றில் எவற்றையாவது வைத்து மனிதர்கள் கட்டிடம் கட்டலாம். 13  ஆனால், ஒவ்வொருவனுடைய வேலைப்பாடும் எப்படிப்பட்டதென்று கடைசியில் தெரிந்துவிடும்; சோதனை நாள் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். ஏனென்றால், அது நெருப்பால் வெளிப்படுத்தப்படும்;+ ஒவ்வொருவனுடைய வேலைப்பாடும் எப்படிப்பட்டது என்பதை அந்த நெருப்பே நிரூபித்துவிடும். 14  அந்த அஸ்திவாரத்தின் மீது ஒருவன் கட்டியது நிலைத்திருந்தால், அதற்கான பலனை அவன் பெறுவான். 15  ஒருவன் கட்டியது எரிந்துபோனால் அவனுக்கு இழப்பு ஏற்படும், அவனோ காப்பாற்றப்படுவான். ஆனால், நெருப்பிலிருந்து தப்பித்தவன்போல் இருப்பான். 16  நீங்கள்தான் கடவுளுடைய ஆலயம்+ என்றும், கடவுளுடைய சக்தி உங்களுக்குள் குடியிருக்கிறது+ என்றும் உங்களுக்குத் தெரியாதா? 17  ஒருவன் கடவுளுடைய ஆலயத்தை அழித்தால், கடவுள் அவனை அழித்துவிடுவார்; ஏனென்றால், கடவுளுடைய ஆலயம் பரிசுத்தமானது, நீங்கள்தான் அந்த ஆலயம்.+ 18  ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஒருவன் இந்த உலகத்தில்* தன்னை ஞானி என்று நினைத்துக்கொண்டால், அவன் முட்டாளாகட்டும், அப்போது அவன் உண்மையில் ஞானியாவான். 19  ஏனென்றால், இந்த உலகத்தின் ஞானம் கடவுளுடைய பார்வையில் முட்டாள்தனமாக இருக்கிறது; “ஞானிகளை அவர்களுடைய தந்திரத்தை வைத்தே அவர் மடக்குகிறார்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 20  “ஞானிகளுடைய யோசனைகள் வீண் என்பது யெகோவாவுக்கு* தெரியும்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ 21  அதனால், மனிதர்கள் செய்வதைப் பற்றி யாரும் பெருமையடிக்க வேண்டாம். 22  பவுலோ அப்பொல்லோவோ கேபாவோ*+ எல்லாரும் உங்களுக்குச் சொந்தமானவர்கள்தான்; அதேபோல், உலகமோ வாழ்வோ சாவோ இன்றுள்ள காரியங்களோ இனிவரும் காரியங்களோ எல்லாம் உங்களுக்குச் சொந்தமானவைதான். 23  ஆனால், நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்;+ கிறிஸ்துவோ கடவுளுக்குச் சொந்தமானவர்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஒரே குறிக்கோளோடு இருக்கிறார்கள்.”
வே.வா., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா