Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 2

மணத்துணைக்கு உண்மையாக இருங்கள்

மணத்துணைக்கு உண்மையாக இருங்கள்

“கடவுள் இணைத்ததை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்.” —மாற்கு 10:9

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ‘உண்மையுள்ளவர்களாக’ இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (சங்கீதம் 31:23) திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்க இது ரொம்ப முக்கியம். உண்மையாக இல்லாவிட்டால், கணவன் மனைவிக்கு இடையே நம்பிக்கை இல்லாமல் போய்விடும். நம்பிக்கையே மகிழ்ச்சியான மணவாழ்விக்கு அஸ்திவாரம்!

இன்று, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இல்லாததால் அநேக குடும்பங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன. உங்கள் குடும்ப வாழ்க்கை அப்படி ஆகாமல் இருக்க, இங்கு கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விஷயங்களைச் செய்யுங்கள்.

1 மணத்துணைக்கு முன்னுரிமை கொடுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.’ (பிலிப்பியர் 1:10) உங்கள் வாழ்க்கையில் திருமண பந்தம் ரொம்ப முக்கியமாக இருப்பதால் அதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

உங்கள் கணவருக்கு (அல்லது மனைவிக்கு) முக்கியத்துவம் தர வேண்டும், நீங்கள் இருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக ‘அனுபவிக்க’ வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். (பிரசங்கி 9:9) துணையை அலட்சியம் செய்வதையோ உதாசீனப்படுத்துவதையோ அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். அவரை (அல்லது அவளை) சந்தோஷமாக வைத்துக்கொள்ள உங்களாலான எல்லாவற்றையும் செய்யும்படி எதிர்பார்க்கிறார். (1 கொரிந்தியர் 10:24) உங்கள் துணை உங்களுக்கு மிகவும் முக்கியமானவர், மதிப்புவாய்ந்தவர் என்பதை அவர் புரியும்படி நடந்துகொள்ளுங்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • இரண்டு பேரும் தவறாமல் நேரம் செலவிடுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் அதைச் சேர்ந்தே செய்யுங்கள்

  • “நான்” என்று யோசிக்காமல் “நாம்” என்று யோசியுங்கள்

2 கெட்ட ஆசைகளைத் தவிர்த்திடுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.” (மத்தேயு 5:28) ஒருவர் ஒழுக்கங்கெட்ட விஷயங்களையே எப்போதும் யோசித்துக்கொண்டிருந்தால், அவர் தன் கணவருக்கோ மனைவிக்கோ உண்மையாக இருக்க முடியாது.

“உன் இருதயத்தைக் காத்துக்கொள்” என்று யெகோவா சொல்கிறார். (நீதிமொழிகள் 4:23; எரேமியா 17:9) அதற்கு, கெட்ட விஷயங்கள் எதையும் பார்க்க கூடாது. (மத்தேயு 5:29, 30) பைபிள் காலங்களில் வாழ்ந்த யோபுவின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள். எந்தவொரு பெண்ணையும் தவறான எண்ணத்தோடு பார்க்கக் கூடாது என்று அவர் தன் கண்களோடு ஒப்பந்தம் செய்தார், அதாவது முடிவு செய்தார். (யோபு 31:1) நீங்களும், ஆபாசமான காட்சியைப் பார்க்கக் கூடாதென முடிவெடுங்கள். அதோடு, கணவரை (அல்லது மனைவியை) தவிர வேறு யாரோடும் நெருங்கி பழகுவதைத் தவிர்த்திடுங்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • ‘என் வாழ்க்கையில் என் கணவரை (அல்லது மனைவியை) தவிர வேறு யாருக்கும் இடமில்லை’ என்பது மற்றவர்களுக்குப் புரியும்படி நடந்துகொள்ளுங்கள்

  • உங்கள் துணையல்லாத ஒருவரோடு பழகுவது கணவருக்கு (அல்லது மனைவிக்கு) பிடிக்கவில்லை என்றால் அவரோடு பழகுவதை நிறுத்துங்கள்