Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்மைவிட மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அன்பு நம்மைத் தூண்டும்

சக மனிதர்மேல் எப்படி அன்பு காட்டுவது?

சக மனிதர்மேல் எப்படி அன்பு காட்டுவது?

நாம் எல்லாருமே ஒரே குடும்பம்தான். ஏனென்றால், நாம் எல்லாருமே முதல் மனிதனான ஆதமின் பிள்ளைகள். குடும்பம் என்றாலே அங்கே அன்பு, பாசம், மரியாதை எல்லாம் இருக்க வேண்டும். ஆனால் இன்று அப்படிப்பட்ட அன்பைப் பார்க்க முடிவதில்லை. நாம் இப்படி இருக்க வேண்டும் என்றுதான் நம் அன்பான இறைவன் ஆசைப்படுகிறாரா? இல்லவே இல்லை.

அன்பைப் பற்றி இறைவேதம் என்ன சொல்கிறது?

“உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல சக மனிதர் மேலும் அன்பு காட்ட வேண்டும்.”—லேவியராகமம் 19:18, அடிக்குறிப்பு.

“உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.”—மத்தேயு 5:44.

சக மனிதர்மேல் அன்பு காட்டுவது என்றால் என்ன?

அன்பைப் பற்றி 1 கொரிந்தியர் 13:4-7-ல் இறைவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்:

“அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது.”

யோசித்துப் பாருங்கள்: நீங்கள் ஏதாவது தவறு செய்யும்போது மற்றவர்கள் உங்கள்மேல் கோபப்படாமல், பொறுமையாகவும் கனிவாகவும் நடந்துகொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

“அன்பு பொறாமைப்படாது.”

யோசித்துப் பாருங்கள்: மற்றவர்கள் எப்போதுமே உங்களை சந்தேகக் கண்ணோடு பார்த்துக்கொண்டிருந்தால் அல்லது உங்கள்மேல் எப்போதுமே பொறாமையாக இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

அன்பு “சுயநலமாக நடந்துகொள்ளாது.”

யோசித்துப் பாருங்கள்: ஒருவர், தான் சொல்வதுதான் சரி என்று இல்லாமல், நீங்கள் சொல்வதையும் மதித்து காதுகொடுத்து கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

அன்பு “தீங்கை கணக்கு வைக்காது.”

யோசித்துப் பாருங்கள்: தனக்கு எதிராக தவறு செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும்போது இறைவன் அவர்களைத் தாராளமாக மன்னிக்கிறார். “அவர் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்க மாட்டார். என்றென்றும் கோபத்தோடு இருக்க மாட்டார்.” (சங்கீதம் 103:9) நம்மால் புண்பட்ட ஒருவர் நம்மை மன்னிக்கும்போது நாம் ரொம்ப சந்தோஷப்படுவோம், இல்லையா? அப்படியென்றால், நம்மை புண்படுத்தியவர்களையும் நாம் தாராளமாக மன்னிக்க வேண்டும்.—சங்கீதம் 86:5.

அன்பு ‘அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது.’

யோசித்துப் பாருங்கள்: நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து இன்னொருவர் சந்தோஷப்பட்டால், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் நமக்கு இருக்கும். அதனால், நாமும் மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாது. அவர்கள் நம் மனதைக் கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தால்கூட!

இறைவனுடைய ஆசி கிடைக்க வேண்டுமென்றால் எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லாரிடமும் இப்படிப்பட்ட அன்பைக் காட்ட வேண்டும். அதற்கு ஒரு வழி, உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வது.