யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 3:1-22

3  “சர்தை சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: கடவுளுடைய ஏழு சக்திகளையும்+ ஏழு நட்சத்திரங்களையும்+ வைத்திருப்பவர் சொல்வது இதுதான்: ‘உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவன் என்று பெயர் எடுத்திருந்தாலும் செத்தவனாகவே இருக்கிறாய்.+  நீ செய்ய வேண்டியவற்றை என் கடவுளுக்குமுன் முழுமையாகச் செய்யாமல் இருப்பதை நான் பார்க்கிறேன். அதனால் விழித்தெழு!+ சாகப்போகும் நிலையில் இருந்தவற்றைப் பலப்படுத்து.  நீ கற்றுக்கொண்டதையும் கேட்டதையும் எப்போதும் நினைவில் வை; அவற்றைக் கடைப்பிடித்துக்கொண்டே இரு. மனம் திருந்து.+ நீ விழித்துக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு திருடனைப் போல் வருவேன்.+ எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பது உனக்குத் தெரியப்போவதில்லை.+  ஆனாலும், தங்கள் உடையைக் கறைபடுத்திக்கொள்ளாத+ சிலர் சர்தையில் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளை உடையைப்+ போட்டுக்கொண்டு என்னோடு நடப்பார்கள். ஏனென்றால், அவர்கள் அதற்குத் தகுதியுள்ளவர்கள்.  அதேபோல், ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு+ வெள்ளை உடை போட்டுவிடப்படும்.+ அவனுடைய பெயரை வாழ்வின் புத்தகத்திலிருந்து ஒருபோதும் துடைத்தழிக்க மாட்டேன்.+ அதற்குப் பதிலாக, அவனை எனக்குத் தெரியும் என்று என் தகப்பனுக்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் சொல்வேன்.+  கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.’  பிலதெல்பியா சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: பரிசுத்தமானவரும்,+ உண்மையானவரும்,+ தாவீதின் சாவியை வைத்திருப்பவரும்,+ ஒருவராலும் பூட்ட முடியாதபடி திறக்கிறவரும், ஒருவராலும் திறக்க முடியாதபடி பூட்டுகிறவரும் சொல்வது இதுதான்:  ‘உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன். உனக்குக் கொஞ்சம் வல்லமை இருக்கிறது; நீ என் வார்த்தையைக் கடைப்பிடித்தாய், என்னை* ஒதுக்கித்தள்ளவில்லை. இதோ! உனக்கு முன்பாகக் கதவைத் திறந்தே வைத்திருக்கிறேன்.+ இதை யாராலும் பூட்ட முடியாது.  இதோ! சாத்தானின் கூட்டத்தை* சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று பொய்யாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.+ இதோ! அவர்களை உன்னிடம் வரவழைத்து உன் காலில் விழ வைப்பேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படியும் செய்வேன். 10  என் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன்படியே நடந்துகொண்டாய்.*+ அதனால், பூமி முழுவதும் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காக அவர்கள் எல்லார்மீதும் வரப்போகிற சோதனை நேரத்தில் நான் உன்னைப் பாதுகாப்பேன்.+ 11  நான் சீக்கிரமாக வரப்போகிறேன்.+ உன் கிரீடத்தை யாரும் எடுத்துப்போடாதபடி உன்னிடம் இருப்பதைத் தக்க வைத்துக்கொள்.+ 12  ஜெயிக்கிறவன் எவனோ அவனை என் கடவுளுடைய ஆலயத்தில் ஒரு தூணாக நிறுத்துவேன்; அங்கிருந்து ஒருபோதும் அவன் நீக்கப்பட மாட்டான். என் கடவுளுடைய பெயரையும் என் கடவுளுடைய நகரத்தின் பெயரையும், அதாவது என் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருகிற புதிய எருசலேமின் பெயரையும்,+ என்னுடைய புதிய பெயரையும்+ அவன்மேல் எழுதுவேன்.+ 13  கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.’ 14  லவோதிக்கேயா சபையின்+ தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: நம்பகமான, உண்மையான+ சாட்சியும்,+ கடவுளுடைய படைப்புகளிலேயே முதல் படைப்புமான+ ஆமென்*+ என்பவர் சொல்வது இதுதான்: 15  ‘உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 16  ஆனால், நீ சூடாகவும்+ இல்லாமல் குளிர்ச்சியாகவும்+ இல்லாமல் வெதுவெதுப்பாக இருப்பதால், என் வாயிலிருந்து உன்னைத் துப்பிவிடப்போகிறேன். 17  “நான் பணக்காரன்,+ செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கிறேன், இனி எனக்கு எதுவும் தேவையில்லை” என்று சொல்கிறாய். ஆனால், நீ இழிவானவன், பரிதாபமானவன், ஏழ்மையானவன், பார்வையில்லாதவன், நிர்வாணமானவன் என்பதையெல்லாம் உணராமல் இருக்கிறாய். 18  அதனால் நான் உனக்குப் புத்திசொல்கிறேன்: நீ பணக்காரனாகும்படி நெருப்பில் புடமிடப்பட்ட தங்கத்தை என்னிடமிருந்து வாங்கிக்கொள். அதோடு, வெட்கக்கேடான நிர்வாணக் கோலத்தில் உன்னை மற்றவர்கள் பார்க்காதபடி+ நீ போட்டுக்கொள்ள வெள்ளை உடைகளை என்னிடமிருந்து வாங்கிக்கொள். பார்வை கிடைக்கும்படி+ உன் கண்களில் பூசிக்கொள்ள கண்மருந்தையும்+ என்னிடமிருந்து வாங்கிக்கொள். 19  என் பாசத்துக்குரிய எல்லாரையும் நான் கண்டித்துத் திருத்துவேன்.+ அதனால், பக்திவைராக்கியத்தோடு இரு, மனம் திருந்து.+ 20  இதோ! நான் கதவுக்குப் பக்கத்தில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். ஒருவன் என் குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் அவனுடைய வீட்டுக்குள் போய் அவனோடு உணவு சாப்பிடுவேன், அவனும் என்னோடு உணவு சாப்பிடுவான். 21  நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு உட்கார்ந்ததுபோல்,+ ஜெயிக்கிறவன் எவனோ அவனை+ என் சிம்மாசனத்தில் என்னோடு உட்கார வைப்பேன்.+ 22  கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.’”

அடிக்குறிப்புகள்

நே.மொ., “என் பெயரை.”
நே.மொ., “ஜெபக்கூடத்தை.”
அல்லது, “என்னுடைய சகிப்புத்தன்மையை நீ பின்பற்றினாய்.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா