யோவேல் 1:1-20

1  பெத்துயேலின் மகனாகிய யோவேல்* என்பவருக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:   “பெரியோர்களே,* இதைக் கேளுங்கள்!தேசத்து ஜனங்களே,* கவனியுங்கள். உங்கள் வாழ்நாளில் இப்படியொரு காரியம் நடந்திருக்குமா?உங்கள் முன்னோர்கள் காலத்திலாவது நடந்திருக்குமா?+   உங்கள் பிள்ளைகளிடம் இதைப் பற்றிச் சொல்லுங்கள்.அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளிடம் சொல்லட்டும்.அந்தப் பிள்ளைகள் அடுத்த தலைமுறையிடம் சொல்லட்டும்.   முதல் வகையான வெட்டுக்கிளிகள்* விட்டுவைத்ததை இரண்டாவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.+இரண்டாவது வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை மூன்றாவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.மூன்றாவது வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை நான்காவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.+   குடிகாரர்களே,+ எழுந்து அழுங்கள்! திராட்சமது குடிப்பவர்களே, ஒப்பாரி வையுங்கள்!இனி உங்களுக்குத் தித்திப்பான திராட்சமது கிடைக்காது.+   பலம்படைத்த வெட்டுக்கிளிக் கூட்டம் என்னுடைய தேசத்துக்கு வந்தது.+ அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்,+ அதன் தாடைகள் சிங்கத்தின் தாடைகள்.   என்னுடைய திராட்சைக் கொடியை அது நாசமாக்கியது, அத்தி மரத்தை மொட்டையாக்கியது.அவற்றின் பட்டைகளை மொத்தமாக உரித்துப் போட்டது.கிளைகளையும் விட்டுவைக்கவில்லை.   மணமகனை இழந்து தவிக்கும் கன்னிப்பெண் போல நீங்கள் புலம்புங்கள்.அவள் துக்கத் துணி* போட்டுக்கொண்டு கதறுவது போல நீங்கள் கதறுங்கள்.   யாருமே யெகோவாவின் ஆலயத்துக்கு உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக்+ கொண்டுவருவதில்லை.யெகோவாவுக்குச் சேவை செய்யும் குருமார்கள் அழுது புலம்புகிறார்கள். 10  வயல்வெளிகள் பாழாய்க் கிடக்கின்றன, நிலங்கள் சோகத்தில் வாடுகின்றன.+தானியம் நாசமாக்கப்பட்டது, புதிய திராட்சமது தீர்ந்துவிட்டது, எண்ணெயும் காலியாகிவிட்டது.+ 11  விவசாயிகள் குழம்பித் தவிக்கிறார்கள், திராட்சைத் தோட்டக்காரர்கள் ஓலமிட்டு அழுகிறார்கள்.கோதுமையும் பார்லியும் எங்குமே இல்லை.வயலின் விளைச்சல் எல்லாமே அழிந்துபோனது. 12  திராட்சைக் கொடி வாடிப்போய்விட்டது.அத்தி மரம் பட்டுப்போய்விட்டது. மாதுளை, ஆப்பிள், பேரீச்ச மரங்களும் மற்ற எல்லா மரங்களும் காய்ந்துவிட்டன.+சந்தோஷத்தில் துள்ளிய ஜனங்கள் அவமானப்பட்டு நிற்கிறார்கள். 13  குருமார்களே! துக்கத் துணியைப் போட்டுக்கொள்ளுங்கள், நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுங்கள்.பலிபீடத்தில் சேவை செய்கிறவர்களே!+ ஒப்பாரி வையுங்கள். என் கடவுளின் ஊழியர்களே! ராத்திரி முழுவதும் துக்கத் துணியை உடுத்தியிருங்கள்.ஏனென்றால், யாருமே கடவுளுடைய ஆலயத்துக்கு உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக்+ கொண்டுவருவதில்லை. 14  விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு அழைப்பு கொடுங்கள்.+ பெரியோர்களை வரச் சொல்லுங்கள், தேசத்து ஜனங்களையும் கூப்பிடுங்கள்.அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு வரட்டும்,+ உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சட்டும். 15  ஐயோ ஆபத்து! யெகோவாவின் நாள் வரப்போகிறது. அந்த நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது.+சர்வவல்லமையுள்ளவர் அந்த நாளில் அழிவைக் கொண்டுவரப்போகிறார். 16  நம்முடைய கண் முன்னாலிருந்து உணவும்,நம் கடவுளுடைய ஆலயத்திலிருந்து சந்தோஷமும் காணாமல் போய்விட்டதுதானே? 17  மண்கட்டிகளுக்குக் கீழே* விதைகள்* காய்ந்து கிடக்கின்றன. சேமிப்புக் கிடங்குகள் காலியாகக் கிடக்கின்றன. தானியம் இல்லாததால் களஞ்சியங்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன. 18  வீட்டு விலங்குகள் முனகுகின்றன. மேய்ச்சல் நிலம் இல்லாததால் மாடுகள் குழப்பத்தில் திரிகின்றன. ஆட்டு மந்தைகளும் தண்டனை அனுபவிக்கின்றன. 19  யெகோவாவே, உங்களிடம் நான் வேண்டுகிறேன்.+வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.மரங்களெல்லாம் தீயில் தீய்ந்துவிட்டன. 20  நீரோடைகள் வற்றிப்போய்விட்டன.வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.அதனால், காட்டு விலங்குகள்கூட உங்கள் உதவிக்காக ஏங்குகின்றன.”

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “யெகோவாவே கடவுள்.”
வே.வா., “மூப்பர்களே.”
வே.வா., “பூமியில் வாழ்கிறவர்களே.”
நே.மொ., “கபளீகரம் செய்யும் வெட்டுக்கிளிகள்.”
நே.மொ., “கூட்டம் கூட்டமான.”
நே.மொ., “சிறகில்லாத.”
நே.மொ., “அகோரப் பசிகொண்ட.”
வே.வா., “மண்வாரிகளில் மண்ணை வாரிப் பார்க்கும்போது.”
அல்லது, “உலர்ந்த அத்திப்பழங்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா