Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்கள் கற்பனை செய்து பார்த்தார்கள்

அவர்கள் கற்பனை செய்து பார்த்தார்கள்

“வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை அவர்கள் பார்க்கவில்லை என்றாலும், தொலைவிலிருந்து அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்.”—எபி. 11:13.

1. நாம் இதுவரை பார்க்காத விஷயங்களைப் பற்றி கற்பனை செய்து பார்ப்பது ஏன் நல்லது? (ஆரம்பப் படம்)

யெகோவா நமக்கு ஒரு அருமையான பரிசைக் கொடுத்திருக்கிறார். அதுதான் கற்பனை செய்து பார்க்கும் திறன்! அதாவது, நாம் இதுவரை பார்க்காத விஷயங்களைக் கற்பனை செய்து பார்க்கும் திறன். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நல்ல நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்து பார்க்கவும், நம்முடைய வாழ்க்கையை நன்றாகத் திட்டமிடவும் இது உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யெகோவாவுக்கு மட்டும்தான் தெரியும். இருந்தாலும், அதைப் பற்றி சில விஷயங்களை அவர் நமக்கு சொல்கிறார். அதையெல்லாம் இப்போது நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும், அதைப் பற்றி நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். இப்படி செய்யும்போது, கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிற விஷயங்கள் எல்லாம் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும்.—2 கொ. 4:18.

2, 3. (அ) நாம் கற்பனை செய்து பார்க்கும் விஷயங்கள் கனவல்ல என்று ஏன் சொல்லலாம்? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதில்களை நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்?

2 சில நேரங்களில், நடக்கவே நடக்காத விஷயங்களைப் பற்றி நாம் கற்பனை செய்யலாம். உதாரணத்திற்கு, ஒரு சிறு பிள்ளை பட்டாம்பூச்சியின்மீது பறப்பதுபோல் கற்பனை செய்யலாம். இது வெறும் கற்பனைதான், நிச்சயம் நடக்காது! ஆனால் சாமுவேலின் அம்மா அன்னாள், நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி கற்பனை செய்தாள். ஆசரிப்புக் கூடாரத்தில் தன்னுடைய மகன் ஆசாரியர்களோடு வேலை செய்யப்போகும் நாளைப் பற்றி கற்பனை செய்துகொண்டிருந்தாள். இதை வெறும் கனவு என்று நாம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், தன்னுடைய மகனை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்வதற்காக அனுப்ப வேண்டும் என்று அன்னாள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள். அன்னாள் அப்படிக் கற்பனை செய்ததால்தான், யெகோவாவுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை அவளால் நிறைவேற்ற முடிந்தது. (1 சா. 1:22) யெகோவா நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிற விஷயங்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பது வெறும் கனவல்ல. நிஜமாகவே நடக்கப்போகும் ஒன்றைப் பற்றிதான் நாம் கற்பனை செய்து பார்க்கிறோம்.—2 பே. 1:19-21.

3 பைபிள் காலங்களில் வாழ்ந்த நிறைய பேர், யெகோவா வாக்குக் கொடுத்திருந்த விஷயங்களைப் பற்றி கற்பனை செய்தார்கள். இதனால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் விஷயங்கள் நிறைவேறுவதை நாம் கற்பனை செய்து பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை? இதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

அவர்களுடைய விசுவாசம் பலப்பட்டது

4. நல்ல ஒரு எதிர்காலத்தைப் பற்றி ஆபேல் ஏன் கற்பனை செய்தார்?

4 யெகோவாவுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்த முதல் மனிதன், ஆபேல். ஆதாம்-ஏவாள் யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். அதற்குப் பிறகு யெகோவா பாம்பிடம் இப்படி சொன்னது ஆபேலுக்கு தெரியும்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதி. 3:14, 15) இது எப்படி நடக்கும் என்று ஆபேலுக்கு தெரியவில்லை என்றாலும், யெகோவா சொன்ன விஷயத்தைப் பற்றி அவர் ஆழ்ந்து யோசித்திருப்பார். ‘பாம்பால் யார் நசுக்கப்படுவார், அவர் எப்படி மனிதர்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வார்?’ என்றெல்லாம் ஆபேல் யோசித்திருக்கலாம். யெகோவா வாக்கு கொடுத்திருந்த எல்லா விஷயங்களும் நிச்சயம் நிறைவேறும் என்பதில் ஆபேலுக்கு விசுவாசம் இருந்தது. அதனால்தான், ஆபேல் பலி செலுத்தியபோது யெகோவா அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.ஆதியாகமம் 4:3-5-ஐயும்; எபிரெயர் 11:4-ஐயும் வாசியுங்கள்.

5. எதிர்காலத்தைப் பற்றி ஏனோக்கு கற்பனை செய்து பார்த்ததால் என்ன நன்மை?

5 கடவுள்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த இன்னொரு மனிதர், ஏனோக்கு. அவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் கெட்டவர்களாக இருந்தார்கள். கடவுளுக்கு விரோதமாக “அதிர்ச்சியூட்டும்” விஷயங்களைப் பேசினார்கள். இருந்தாலும், கடவுள் சொல்ல சொன்ன செய்தியை ஏனோக்கு அவர்களிடம் தைரியமாக சொன்னார். அதாவது, கெட்ட மக்களை யெகோவா அழிக்கப்போகிறார் என்று சொன்னார். (யூ. 14, 15) அவரால் எப்படி தைரியமாக சொல்ல முடிந்தது? யெகோவாமீது அவருக்கு உறுதியான விசுவாசம் இருந்தது. அதனால், உலகத்தில் இருக்கிற எல்லா மக்களும் யெகோவாவை வணங்கினால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்திருப்பார். அதனால்தான், அவரால் தைரியமாக சொல்ல முடிந்தது.எபிரெயர் 11:5, 6 வாசியுங்கள்.

6. பெருவெள்ளத்திற்குப் பிறகு, நோவா எதைப் பற்றி கற்பனை செய்து பார்த்திருப்பார்?

6 நோவாவுக்கு யெகோவாமீது விசுவாசம் இருந்தது. அதனால்தான் பெருவெள்ளத்தில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார். (எபி. 11:7) விசுவாசம் இருந்ததால்தான், பெருவெள்ளத்திற்குப் பிறகு யெகோவாவுக்கு மிருகங்களைப் பலி செலுத்தினார். (ஆதி. 8:20) அதற்குப் பிறகு, மக்கள் மறுபடியும் கெட்ட காரியங்களை செய்தார்கள். நிம்ரோது அவர்களை ஆட்சி செய்ய ஆரம்பித்தான், யெகோவாவுக்கு விரோதமாக கலகம் செய்ய அவர்களைத் தூண்டினான். (ஆதி. 10:8-12) இருந்தாலும் நோவாவுக்கு யெகோவாமீது இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொஞ்சம்கூட குறையவே இல்லை. பாவத்தையும் மரணத்தையும் கடவுள் ஒருநாள் ஒழித்துக்கட்டுவார் என்று ஆபேல் உறுதியாக நம்பியது போலவே நோவாவும் நம்பினார். அதுமட்டும் இல்லாமல், கொடூரமான ஆட்சியாளர்கள் இல்லாத காலத்தைப் பற்றி நோவா கற்பனை செய்து பார்த்திருப்பார். நாமும் நோவாவை போலவே சீக்கிரத்தில் வரப்போகும் அந்த அருமையான எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்து பார்க்கலாம்.—ரோ. 6:23.

வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை அவர்கள் கற்பனை செய்தார்கள்

7. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எதைப் பற்றி கற்பனை செய்து பார்த்திருப்பார்கள்?

7 கடவுள் வாக்குக் கொடுத்திருந்த அருமையான எதிர்காலத்தைப் பற்றி ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு கற்பனை செய்திருப்பார்கள். ஏனென்றால், அவர்களுடைய “சந்ததி” மூலமாக எல்லா தேசத்து மக்களையும் ஆசீர்வதிக்கப் போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதி. 22:18; 26:5; 28:14) அதோடு, அவர்களுடைய குடும்பம் ஒரு பெரிய தேசமாக ஆகும் என்றும் வாக்குப்பண்ணப்பட்ட அழகான தேசத்தில் அவர்கள் வாழ்வார்கள் என்றும் யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதி. 15:5-7) யெகோவாவுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்று இந்த மூன்று பேரும் உறுதியாக நம்பினார்கள். அதனால், அவர்களுடைய சந்ததி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஏற்கெனவே வாழ்வது போல் கற்பனை செய்தார்கள். சொல்லப்போனால், ஆதாம்-ஏவாள் பாவம் செய்த சமயத்திலிருந்தே புதிய உலகத்தில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க தம் ஊழியர்களுக்கு யெகோவா உதவியிருக்கிறார்.

8. யெகோவாமீது விசுவாசம் வைப்பதற்கும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கும் ஆபிரகாமுக்கு எது உதவியது?

8 விசுவாசத்தினால்தான் கஷ்டமான சூழ்நிலைகளிலும் ஆபிரகாம் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து நடந்தார். ஆபிரகாமுக்கு எப்படி யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது? யெகோவா வாக்குக் கொடுத்திருந்த எல்லாவற்றையும் ஆபிரகாமும் மற்ற உண்மையுள்ள ஊழியர்களும் கற்பனை செய்து பார்த்தார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்போது அந்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்றாலும் அவர்கள் “தொலைவிலிருந்து அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:8-13-ஐ வாசியுங்கள்.) இதற்கு முன்பு கொடுத்திருந்த வாக்குறுதிகளை யெகோவா நிறைவேற்றினார் என்பது ஆபிரகாமுக்கு நன்றாகத் தெரியும். அதனால், எதிர்காலத்திலும் அவருடைய வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறும் என்று உறுதியாக நம்பினார்.

9. கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்திருந்ததால் ஆபிரகாம் எப்படி நன்மையடைந்தார்?

9 யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது ஆபிரகாமுக்கு விசுவாசம் இருந்ததால் யெகோவா சொன்னதை எல்லாம் அவர் செய்தார். உதாரணத்திற்கு, ஊர் நகரத்தில் இருந்த அவருடைய வசதியான வீட்டைவிட்டு போனார். அதற்குப் பிறகு கானானில் இருந்த எந்தவொரு நகரத்திலும் அவர் நிரந்தரமாக குடியிருக்கவில்லை. அந்த நகரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் யாரும் யெகோவாவை வணங்காததால், அந்த நகரங்கள் எல்லாம் நிரந்தரமாக இருக்காது என்பது ஆபிரகாமுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (யோசு. 24:2) அதனால்தான், ‘கடவுளே கட்டியமைத்த உறுதியான அஸ்திவாரங்கள் உள்ள நகரத்திற்காக’ ஆபிரகாம் காத்துக்கொண்டிருந்தார். அதாவது, இந்த முழு பூமியையும் நிரந்தரமாக ஆட்சி செய்யப்போகும் கடவுளுடைய அரசாங்கத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தார். (எபி. 11:10) ஆபிரகாம், ஆபேல், ஏனோக்கு, நோவா ஆகியோர் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்தார்கள். எதிர்கால ஆசீர்வாதங்களைப் பற்றி கற்பனை செய்து பார்த்தப்போதெல்லாம் அவர்களுடைய விசுவாசம் பலப்பட்டது.எபிரெயர் 11:15, 16-ஐ வாசியுங்கள்.

10. எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்து பார்த்ததால் சாராள் எப்படி நன்மையடைந்தாள்?

10 ஆபிரகாமுடைய மனைவி சாராளுக்கும் யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. சாராளுக்கு 90 வயதாகியும் குழந்தை இல்லை. இருந்தாலும், தனக்கு ஒரு குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தை எதிர்காலத்தில் ஒரு பெரிய தேசமாக ஆகும் என்றெல்லாம் அவள் கற்பனை செய்தாள். (எபி. 11:11, 12) இதெல்லாம் நடக்கும் என்று சாராள் எப்படி உறுதியாக நம்பினாள்? ஏனென்றால், “நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன்” என்று யெகோவா அவளுடைய கணவனிடம் சொல்லியிருந்தார். (ஆதி. 17:16) யெகோவா வாக்குக் கொடுத்தது போலவே, சாராளுக்கு ஈசாக்கு என்றொரு மகன் பிறந்தான். இந்த அற்புதத்தைப் பார்த்ததால், யெகோவாவுடைய மற்ற வாக்குறுதிகளும் எதிர்காலத்தில் நிறைவேறும் என்று சாராள் உறுதியாக நம்பினாள். யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிற விஷயங்களை நாமும் கற்பனை செய்து பார்க்கும்போது நம்முடைய விசுவாசமும் பலப்படும்.

கிடைக்கப்போகும் பரிசைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார்

11, 12. யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்க மோசேக்கு எது உதவியாக இருந்தது?

11 யெகோவாவுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் மோசேவுக்கும் அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. அவர் எகிப்தில் ஒரு இளவரசராக வளர்ந்தார். ஆனால் பணம், பொருள், அதிகாரம் எல்லாவற்றையும்விட யெகோவாவைத்தான் அவர் அதிகமாக நேசித்தார். எபிரெயர்களாக இருந்த மோசேயின் பெற்றோர் யெகோவாவைப் பற்றியும்... எபிரெயர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப் போவதைப் பற்றியும்... அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கொடுக்கப் போவதைப் பற்றியும்... அவருக்கு சொல்லிக்கொடுத்தார்கள். (ஆதி. 13:14, 15; யாத். 2:5-10) யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதிகளை மோசே அடிக்கடி யோசித்துப் பார்த்தார். அதனால்தான், யெகோவாமீது அவருக்கு இருந்த அன்பு அதிகமானது.

12 மோசே ஒரு விஷயத்தைப் பற்றி எப்போதும் யோசித்துப் பார்த்தார். அதைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “விசுவாசத்தினால்தான் மோசே, வளர்ந்து ஆளானபோது பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை விரும்பாதிருந்தார்; பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்பங்களை அனுபவிப்பதையே அவர் தேர்ந்தெடுத்தார்; ஏனென்றால், எகிப்தின் பொக்கிஷங்களைவிட, கடவுளால் நியமிக்கப்படுவதன் பொருட்டு வரும் அவதூறையே மேலான செல்வமென்று கருதி, தனக்குக் கிடைக்கவிருந்த பலன்மீது கண்களை ஒருமுகப்படுத்தினார்.”—எபி. 11:24-26.

13. யெகோவாவுடைய வாக்குறுதிகளை மோசே எப்போதும் யோசித்துப் பார்த்ததால் எப்படி நன்மையடைந்தார்?

13 எபிரெயர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப் போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். அதைப் பற்றியே மோசே ஆழமாக யோசித்துப் பார்த்திருப்பார். மக்களை மரணத்திலிருந்து யெகோவா விடுதலை செய்வார் என்று மற்ற உண்மை ஊழியர்கள் நம்பியது போல் மோசேயும் நம்பினார். (யோபு 14:14, 15; எபி. 11:17-19) அதனால்தான், மக்கள்மீது யெகோவாவுக்கு எந்தளவு அன்பு இருந்தது என்று மோசே புரிந்துகொண்டார். அப்படிப் புரிந்துகொண்டதால், யெகோவாவை இன்னும் அதிகமாக நேசித்தார், அவர்மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்தார். வாழ்நாள் எல்லாம் யெகோவாவுக்கு சேவை செய்ய இது அவருக்கு உதவியாக இருந்தது. (உபா. 6:4, 5) பார்வோன் தன்னை கொலை செய்ய நினைத்தபோதிலும் மோசே பயப்படவில்லை. எதிர்காலத்தில் யெகோவா தனக்கு பலன் அளிப்பார் என்று உறுதியாக நம்பினார்.—யாத். 10:28, 29.

எதிர்காலத்தைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள்

14. எதிர்காலத்தைப் பற்றி சிலர் எப்படி கற்பனை செய்கிறார்கள்?

14 நடக்கவே நடக்காத விஷயங்களைப் பற்றி நிறைய பேர் கற்பனை செய்கிறார்கள். உதாரணத்திற்கு, ரொம்ப ஏழையாக இருக்கும் சிலர் தாங்கள் பணக்காரர்களாக ஆவது போலவும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது போலவும் கற்பனை செய்கிறார்கள். ஆனால் சாத்தானுடைய உலகத்தில், ‘வருத்தமும் சஞ்சலமும்தான்’ இருக்கும் என்று பைபிள் சொல்கிறது. (சங். 90:10) இன்னும் சிலர், இந்த உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் மனித ஆட்சிதான் சரிசெய்யும் என்று நினைக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய ஆட்சியால் மட்டும்தான் அதையெல்லாம் சரிசெய்ய முடியும் என்று பைபிள் சொல்கிறது. (தானி. 2:44) நிறைய பேர், இந்த உலகம் மாறவே மாறாது என்று நினைக்கிறார்கள். ஆனால், கெட்டவர்களை கடவுள் அழிக்கப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது. (செப். 1:18; 1 யோ. 2:15-17) யெகோவாவுடைய வாக்குறுதிகளுக்கு நேரெதிராக கற்பனை செய்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனென்றால் அவர்கள் கற்பனை செய்யும் எதுவுமே நடக்காது!

நீங்கள் புதிய உலகத்தில் இருப்பதுபோல் கற்பனை செய்கிறீர்களா? (பாரா 15)

15. (அ) யெகோவா வாக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றையும் நாம் கற்பனை செய்து பார்ப்பது ஏன் நல்லது? (ஆ) நீங்கள் எதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

15 நமக்கு ஒரு அருமையான எதிர்காலத்தைக் கொடுக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி யோசிக்கும்போது நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான தைரியமும் கிடைக்கிறது. உங்களுக்கு பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிற விஷயங்களைப் பற்றி நீங்கள் கற்பனை செய்கிறீர்களா? நீங்கள் பூமியில் என்றென்றும் வாழப் போகிறீர்கள் என்றால் உங்கள் நண்பர்களோடு சேர்ந்து இந்தப் பூமியை ஒரு அழகிய தோட்டமாக மாற்றுவதுபோல் கற்பனை செய்கிறீர்களா? இந்த வேலையை மேற்பார்வை செய்கிறவர்கள் உங்கள்மீது அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். நீங்கள் யெகோவாவை நேசிப்பது போலவே உங்களை சுற்றி இருப்பவர்களும் யெகோவாவை நேசிப்பார்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கவும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் உங்கள் திறமைகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் ரொம்ப சந்தோஷப்படுவீர்கள். ஒருவேளை, உயிர்த்தெழுந்து வருகிறவர்களுக்கு நீங்கள் யெகோவாவைப் பற்றி சொல்லிக்கொடுக்கலாம். (யோவா. 17:3; அப். 24:15) நீங்கள் கற்பனை செய்யும் இந்த விஷயங்கள் எல்லாம் வெறும் கனவாக கலைந்துவிடாது. அதெல்லாம் எதிர்காலத்தில் நிச்சயம் நடக்குமென்று பைபிள் சொல்கிறது.—ஏசா. 11:9; 25:8; 33:24; 35:5-7; 65:22.

நீங்கள் கற்பனை செய்யும் விஷயத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள்

16, 17. எதிர்காலத்தில் நமக்கிருக்கும் நம்பிக்கையைப் பற்றி பேசுவதால் என்ன நன்மை?

16 புதிய உலகத்தில் நாம் என்ன செய்ய ஆசைப்படுகிறோம் என்பதைப் பற்றி நம் சகோதர சகோதரிகளிடம் பேசும்போது புதிய உலகம் நமக்கு நிஜமான ஒன்றாக இருக்கும். நாம் ஒவ்வொருவரும் அங்கு என்ன செய்வோம் என்பது இப்போது நமக்கு தெரியாது. இருந்தாலும், அதைப் பற்றி பேசும்போது யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகளில் நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதைக் காட்டுவோம். அதுமட்டும் இல்லாமல், மற்றவர்களும் அதைப் பற்றி கற்பனை செய்து பார்க்க நாம் உதவி செய்வோம். இப்படி செய்யும்போது, கஷ்டமான சூழ்நிலைகளிலும் யெகோவாவை சேவிக்க நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவோம். அப்போஸ்தலன் பவுலும் ரோமில் இருந்த சகோதரர்களும் இப்படித்தான் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினார்கள்.—ரோ. 1:11, 12.

17 நீங்கள் யெகோவாவுடைய வாக்குறுதிகளைப் பற்றி அதிகமாக யோசிக்கும்போது உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி குறைவாகவே யோசிப்பீர்கள். ஒருசமயம், பேதுருவும் ஒரு விஷயத்தைப் பற்றி கவலையாக இருந்தார். அதனால் இயேசுவிடம், “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார். எதிர்காலத்தில் பேதுருவும் மற்ற சீடர்களும் தாங்கள் செய்யப்போகும் அருமையான விஷயங்களைப் பற்றியே யோசிக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். அதனால், “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே, மனிதகுமாரன் தமது மகிமையான சிம்மாசனத்தில் அமரும்போது, என்னைப் பின்பற்றுகிற நீங்களும் பன்னிரண்டு சிம்மாசனங்களில் அமர்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். என் பெயரை முன்னிட்டு வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ தகப்பனையோ தாயையோ பிள்ளைகளையோ நிலங்களையோ தியாகம் செய்கிற எவரும், பல மடங்காக அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள், முடிவில்லா வாழ்வையும் பெற்றுக்கொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 19:27-29) அதனால், இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்ய போவதைப் பற்றி... பூமியில் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி... பேதுருவும் மற்ற சீடர்களும் யோசித்துப் பார்த்தார்கள்.

18. யெகோவாவுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தைப் பற்றி கற்பனை செய்து பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை?

18 யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் வைக்க அவருடைய ஊழியர்களுக்கு எது உதவியது என்று இந்தக் கட்டுரையில் பார்த்தோம். உதாரணத்திற்கு, யெகோவா வாக்குக் கொடுத்திருந்த சந்தோஷமான எதிர்காலத்தைப் பற்றி ஆபேல் யோசித்துப் பார்த்தார். அந்த வாக்குறுதியின்மீது அவருக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்ததால்தான், ஆபேல் கடவுளுக்குப் பிரியமானதை செய்தார். ‘வித்துவை’ பற்றி, அதாவது சந்ததியை பற்றி, யெகோவா கொடுத்திருந்த வாக்குறுதியை ஆபிரகாம் கற்பனை செய்து பார்த்தார். அதனால்தான், கீழ்ப்படிவதற்குக் கஷ்டமாக இருந்த சூழ்நிலையிலும்கூட யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார். (ஆதி. 3:15) தனக்கு கிடைக்கவிருந்த பரிசைப் பற்றி மோசே கற்பனை செய்தார். அதனால்தான், யெகோவாமீது அவருக்கிருந்த அன்பும் விசுவாசமும் அதிகமானது. (எபி. 11:26) அதேபோல், யெகோவா நமக்கு வாக்குக் கொடுத்திருக்கும் விஷயங்களைப் பற்றி நாம் கற்பனை செய்து பார்க்கும்போது, யெகோவாமீது நமக்கிருக்கும் விசுவாசமும் அன்பும் அதிகமாகும். நம்முடைய கற்பனைத் திறனை வேறு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.