Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 பைபிளின் கருத்து

தியானம்

தியானம்

தியானம் என்றால் என்ன?

“உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன்.”—சங்கீதம் 77:12, பொது மொழிபெயர்ப்பு.

மக்களின் பதில்: தியானத்தில் பலவகை இருக்கிறது.

அவற்றில் சில, பழமையான கிழக்கத்திய மதங்களிலிருந்து வந்தன. “நம் மனதை வெறுமையாக்கினால்தான் விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்” என்றார் ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்ற எழுத்தாளர். அதாவது, மனதை வெறுமையாக்கி, ஒரு பொருளின் மீதோ வார்த்தையின் மீதோ மனதை ஒருமுகப்படுத்துவதுதான் தியானம்... இப்படி செய்யும்போது மன நிம்மதியும் தெளிவும் கிடைக்கும், நாம் பரவச நிலையை அடைவோம்... என்பது அவருடைய கருத்து.

பைபிளின் பதில்:

தியானத்தைப் பற்றி பைபிள் உயர்வாகப் பேசுகிறது. (1 தீமோத்தேயு 4:15) ஆனால், தியானத்திற்கு பைபிள் கொடுக்கும் விளக்கம் வித்தியாசமானது. மனதை வெறுமையாக்குவதையோ வார்த்தைகளை மந்திரம்போல் திரும்பத் திரும்ப சொல்வதையோ தியானம் என்று பைபிள் குறிப்பிடுவதில்லை. கடவுளுடைய குணங்கள், ஆலோசனைகள், படைப்புகள் போன்ற அருமையான விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசிப்பதுதான் தியானம். கடவுளுடைய ஊழியர் இப்படி ஜெபம் செய்தார்: “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை (அதாவது, கடவுளுடைய செயல்களை) யோசிக்கிறேன்.” (சங்கீதம் 143:5) “என் படுக்கையின்மேல் நான் உம்மை யோசிப்பேன், இரவில் உம்மைத் தியானிப்பேன்” என்றும் அவர் சொன்னார்.—சங்கீதம் 63:6, NW.

 தியானிப்பதால் நமக்கு என்ன நன்மை?

“நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள்.”—நீதிமொழிகள் 15:28, ஈஸி டு ரீட் வர்ஷன்.

பைபிளின் பதில்:

நல்ல விஷயங்களைத் தியானிக்கும்போது நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வோம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவோம், மனபலம் பெறுவோம். ஞானமாகப் பேசவும் நடந்துகொள்ளவும் இவை நமக்கு உதவும். (நீதிமொழிகள் 16:23) இப்படித் தியானிக்கும்போது வாழ்க்கையில் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும். கடவுளைப் பற்றி தியானிக்கும் ஒருவர், “நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்” என்று சங்கீதம் 1:3 (பொ.மொ.) சொல்கிறது.

விஷயங்களை நன்கு புரிந்துகொள்ளவும் ஞாபகத்தில் வைக்கவும்கூட தியானம் நமக்கு உதவும். உதாரணத்திற்கு, கடவுள் படைத்த ஒன்றை அல்லது பைபிளிலுள்ள ஒரு விஷயத்தைப் பற்றி படிக்கும்போது நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்வோம். ஆனால் அதைத் தியானிக்கும்போதுதான், அந்தத் தகவல்கள் எப்படி மற்ற விஷயங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்வோம். நாம் ஏற்கெனவே கற்றுக்கொண்ட விஷயங்களோடு தொடர்புபடுத்தியும் பார்ப்போம். ஒரு தச்சன் எப்படி பல்வேறு மரப் பலகைகளை ஒன்று சேர்த்து ஒரு அழகான மேஜையைச் செய்வாரோ அதேபோல் கற்றுக்கொண்ட விஷயங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பார்க்கும்போதுதான் அதை முழுமையாகப் புரிந்துகொள்வோம்.

எப்படித் தியானம் செய்ய வேண்டும்?

“எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் [தந்திரமுள்ளது] மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”—எரேமியா 17:9.

பைபிளின் பதில்:

“பாலியல் முறைகேடு, திருட்டு, கொலை, கட்டுக்கடங்கா பேராசை, மணத்துணைக்குத் துரோகம், தீய செயல், வஞ்சகம், வெட்கங்கெட்ட நடத்தை, பொறாமைப் பார்வை, . . . வறட்டுப் பிடிவாதம் ஆகியவற்றுக்குக் காரணமான கெட்ட எண்ணங்கள் மனிதர்களுடைய இருதயத்திற்குள்ளிருந்தே வெளிவருகின்றன.” (மாற்கு 7:21, 22) நம்முடைய எண்ணங்கள் நெருப்பு போன்றது; நாம் அதைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தவறான எண்ணங்கள் தவறான ஆசைகளுக்கு வழி திறக்கும். கெட்ட விஷயங்களைச் செய்ய நம்மை தூண்டும்.—யாக்கோபு 1:14, 15.

அதனால்தான் ‘உண்மையான, நீதியான, சுத்தமான, விரும்பத்தக்க, மெச்சத்தக்க, ஒழுக்கமான, பாராட்டுக்குரிய’ விஷயங்களை தியானிக்கும்படி பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 4:8, 9) இப்படிப்பட்ட அருமையான விஷயங்களை நம்முடைய மனதில் விதைத்தால் முத்தான குணங்களை வளர்த்துக்கொள்வோம், இனிமையாகப் பேசுவோம், மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்வோம்.—கொலோசெயர் 4:6. ▪ (g14-E 05)