Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளை நம்புவதற்கான காரணங்கள்

4. அறிவியல்பூர்வ துல்லியம்

4. அறிவியல்பூர்வ துல்லியம்

அறிவியல் நம் நாளில் எட்ட முடியாத சிகரங்களைத் தொட்டிருக்கிறது. அதன் விளைவாக, பழைய கருத்துகள் களையப்பட்டு புது கருத்துகள் களமிறக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டவை இப்போது கற்பனையென ஓரங்கட்டப்படுகின்றன. இதனால், அறிவியல் பாடப்புத்தகங்களில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

பைபிள் ஓர் அறிவியல் பாடப்புத்தகம் அல்ல. என்றாலும், அறிவியல் விஷயங்களைப் பொறுத்தவரை, சரியான தகவல்களைத் தருவதில் மட்டுமல்ல, தவறான தகவல்களைத் தராத வகையிலும் அது தலைசிறந்து விளங்குகிறது.

அறிவியலுடன் முரண்படும் கருத்துகள் இல்லை.

பண்டைய காலங்களில் பல தவறான கருத்துகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. உதாரணமாக, பூமியைக் குறித்த பல கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவின. பூமி தட்டையாக இருக்கிறது என்றும் உறுதியான பொருட்கள் அதை உயரே தாங்கிப் பிடித்திருக்கின்றன என்றும் பல கருத்துகள் நிலவின. நோய்கள் பரவுவது எப்படி, அவற்றைத் தடுப்பது எப்படி என்பதைப்பற்றி விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னர், மருத்துவர்கள் சில சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வந்தனர்; அவற்றில் சில பயனற்றவையாகவும் சில சமயங்களில் ஆபத்தானவையாகவும் இருந்தன. ஆனால், பைபிளிலுள்ள 1,100-⁠க்கும் மேற்பட்ட அதிகாரங்களில் ஒரு தடவைகூட அறிவியலுக்கு முரணான எந்தக் கருத்தோ ஆபத்தான சிகிச்சை முறைகளோ தெரிவிக்கப்படவில்லை.

அறிவியல்பூர்வமாய் நம்பத்தகுந்த குறிப்புகள்.

பூமி ‘அந்தரத்திலே தொங்குகிறது’ என சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பைபிள் குறிப்பிட்டது. (யோபு 26:7) ‘பூமி உருண்டை’ வடிவில் அதாவது கோள வடிவில் இருக்கிறது என பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் ஏசாயா தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார். (ஏசாயா 40:22) கோள வடிவ பூமி வெட்டவெளியில் எந்தவொரு ஆதாரமுமின்றி வைக்கப்பட்டுள்ளது. இது நவீன விஞ்ஞானத்தின் கருத்திற்கு ஒத்திருக்கிறது அல்லவா?

சுமார் பொ.ச.மு. 1500-⁠ல் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தில் (பைபிளின் முதல் ஐந்து புத்தகத்தில் காணப்படுகிறது) நோயாளிகளைத் தனியாக ஒதுக்கிவைப்பது, செத்த உடல்களைக் கையாளுவது, கழிவுகளை அகற்றுவது ஆகியவை சம்பந்தமான சட்டங்கள் இருந்தன.​—லேவியராகமம் 13:1-5; எண்ணாகமம் 19:1-13; உபாகமம் 23:13, 14.

இப்பிரபஞ்சம் திடீரென “பிறந்தது” என விஞ்ஞானிகள் முடிவு செய்வதற்கு சக்திவாய்ந்த தொலைநோக்கிகளை பயன்படுத்தியது ஒரு காரணமாக இருந்திருக்கிறது. ஆனால், விஞ்ஞானிகள் எல்லாருமே இந்த விளக்கத்தை இருகரம் நீட்டி வரவேற்கவில்லை. பேராசிரியர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு பிரபஞ்சம் பிறந்தது என்றால் அதற்கு ஒரு காரணகர்த்தாவும் இருக்க வேண்டுமெனத் தெரிகிறது; ஒரு காரணகர்த்தா இல்லாமல் அத்தகைய ஒரு பிரபஞ்சம் உண்டானதென எப்படி கற்பனை செய்ய முடியும்?” என்றாலும், தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பைபிளின் முதல் வசனம் தெள்ளத்தெளிவாக இவ்வாறு குறிப்பிட்டது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”​—ஆதியாகமம் 1:1.

பூமி உருண்டை என்றும் அது ‘அந்தரத்திலே தொங்குகிறது’ என்றும் வெகு காலத்திற்கு முன்பே பைபிள் தெளிவாகக் குறிப்பிட்டது

பைபிள் பழமையான ஒரு புத்தகமாயும் பல விஷயங்களை அலசுகிறதாயும் இருக்கிறபோதிலும் அறிவியல்பூர்வமாக அதில் எந்தத் தவறுகளும் இல்லை. அத்தகைய ஒரு புத்தகம் நாம் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்று அல்லவா? a

a பைபிள் விஞ்ஞானப்பூர்வமாய் துல்லியமானது என்பதற்கான கூடுதல் எடுத்துக்காட்டுகளுக்கு எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 18-21-ஐக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.