Skip to content

யாருடைய கைவண்ணம்?

பூனையின் நாக்கு

பூனையின் நாக்கு

 வீட்டில் வளரும் பூனைகள் தங்களை நன்றாக பராமரித்துக்கொள்ளும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். தூங்காமல் இருக்கும் நேரத்தில், கால்வாசி நேரத்தை தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்வதற்கே பூனைகள் செலவு செய்கின்றன. பூனை தன்னை இவ்வளவு சுத்தமாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணம், அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அதனுடைய நாக்குதான்.

 யோசித்துப்பாருங்கள்: பூனையின் நாக்கில் 290 பாப்பிலேகள் (papillae) இருக்கின்றன. காம்புகள் போன்று இருக்கும் இந்த பாப்பிலேகள் நாக்கின் உட்புறத்தை நோக்கி இருக்கும். இவை சிறிய சிறிய முட்கள் போன்றவை. அவை நம்முடைய நகத்தைப் போல உறுதியாக இருக்கும். பூனையின் நாக்கில் இருக்கும் ஒவ்வொரு காம்பின் நுணியிலும் குழிகள் இருக்கும். இந்தக் குழிகளில் பூனை தன்னுடைய எச்சிலை நிரப்பி வைத்துக்கொள்கிறது. அது தன்னுடைய உடம்பை நக்கும்போது, அதனுடைய காம்பில் இருக்கும் எச்சில், முடியையும் தாண்டி பூனையின் தோல்லின்மேல் படுகிறது.

பூனையின் நாக்கில் இருக்கும் காம்புகளின் விரிவாக்கப்பட்ட காட்சி

 ஒரு பூனை கிட்டதட்ட 48 கிராம் எச்சிலை ஒவ்வொரு நாளும் தன்னுடைய நாக்கின் வழியாக தன்னுடைய தோலுக்கும் முடிக்கும் கொண்டுசெல்கிறது. பூனையின் எச்சிலுள்ள என்ஸைம்களால் அதனுடைய உடம்பில் இருக்கும் பூச்சிகள் கிருமிகள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்ய முடியும். பூனைகளுக்கு வியர்வைச் சுரக்கும் சுரபிக்கள் குறைவாக இருக்கின்றன. அதனால் அது வெளியிடும் எச்சில் அதன் உடம்பைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 பூனை தன்னுடைய தோலை நக்கும்போது, அதன் நாக்கில் இருக்கும் காம்புகள், அதனுடைய முடிகளில் இருக்கும் சிக்குகளைச் சுலபாக உடைத்துவிடுகிறது. அதோடு, அந்தக் காம்புகளின் நுணிகள் பூனையின் தோலுக்குப் புத்துணர்ச்சி தருகின்றன. பூனையின் நாக்கை காப்பி அடித்து ஆராய்ச்சியாளர்கள் தலைவாருவதற்கான ஒரு பிரஷை அதாவது சீப்பைத் தயாரித்தார்கள். சாதாரண சீப்புகளைப் போல் இல்லாமல் இந்த சீப்பை வைத்து மென்மையாகத் தலை வார முடியும். சிக்குகளையும் சுலபமாக எடுக்க முடியும். சீப்பையும் எளிதில் சுத்தம் செய்துவிட முடியும். பூனையின் நாக்கைப் பார்த்து, அடர்த்தியாக, பூசுபூசுவென்று இருக்கும் முடிகளைக் கொண்ட பகுதிகளை இன்னும் நன்றாக சுத்தம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் பொருள்களைத் தயாரிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அதோடு, இதுபோன்ற தோல் பகுதிகளில் லோஷன்களை அல்லது மருந்துகளைப் பூசுவதற்கு இன்னும் சிறந்த முறைகளைக் காம்புகள் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பூனையின் நாக்கு தானாகவே வந்ததா? அல்லது படைக்கப்பட்டதா?